Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
தவெக அமைச்சரவையில் பங்கு பெறுவதாக ஐயூஎம்எல் கட்சியும், விசிகவும் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று
(22-05-26) காலை 9:30 மணியளவில் ஐயூஎம்எல் எம்.எல்.ஏ ஏ.எம். ஷாஜகான் மற்றும் விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர்களாகப் பதவியேற்ற வன்னி அரசு மற்றும் ஷாஜகானுக்கு இலாகா ஒதுக்கப்பட்டது, அதன்படி, அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃபு வாரியத் துறையும், அமைச்சர் வன்னி அரசுக்கு ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர் நலனை உள்ளடக்கிய சமூக நீதித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை,அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜகானுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகானும் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னியரசு மற்றும் ஷாஜகான் ஆகிய இருவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b