Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 22 மே (ஹி.ச.)
மாநிலங்களவை காலியிடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு இடைத்தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சட்டசபை எண்ணிக்கையைப் பார்க்கையில், 17-வது சட்டசபையில் த.வெ.க.வுக்கு 120 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.
தி.மு.க.வுக்கு 59 உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க.வுக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் முதல் முறையாக த.வெ.க. உறுப்பினர் நுழைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், த.வெ.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே இந்த முறை வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
போட்டி ஏற்பட்டால், ஜூன் 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
அதே நாள் மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA