வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேர் கைது - கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல்
ராமநாதபுரம், 22 மே (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததுடன், கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாம்பன் ரயில்வே நிலையம் மற்றும் தெற்குவாடி கடற்கரை பகுதிகளி
Arrest


ராமநாதபுரம், 22 மே (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததுடன், கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாம்பன் ரயில்வே நிலையம் மற்றும் தெற்குவாடி கடற்கரை பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது முருகன் என்பவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், வீட்டிலேயே கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கஞ்சா செடிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முருகன், இருளேஸ்வரன் மற்றும் சரவணகணபதி ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, மேலும் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பாம்பன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN