Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 10 தொகுதிகளில் போட்டியிட்டு, 1 தொகுதியில் வெற்றி பெற்றது.
மக்கள்மனநிலையின் வெளிப்பாடு மட்டுமல்ல; இத்தேர்தல் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி. அதனால் நாம் யாரும் இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி, கேப்டன் நமக்கு வகுத்துக் கொடுத்த பாதையிலே தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம்.
கேப்டன் மீதும் தேமுதிக மீதும் மக்கள் வைத்துள்ள பற்றும், பாசமும், நம்பிக்கையும், மரியாதையும் இம்மியளவும் குறையவில்லை என்பதை மக்களை நேரடியாக சந்திக்கும் போது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.
மேலும், மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியைச் சேர்ந்த அனைவருக்கும், வாக்களித்து ஆதரவு அளித்த மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் உழைத்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், மேலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து தொண்டர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்காலிகத்தை கண்டு துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடன் சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல், உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நம் இலக்கை அடைய வீறுகொண்டு நடைபோடுவோம்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
விருத்தாசலம் தொகுதியின் வெற்றியை கேப்டனுக்கும், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் சமர்ப்பிக்கிறேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam