Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் அடிப்படையில், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களை பணி மூப்பு (Seniority) அடிப்படையில் மற்ற டாஸ்மாக் கடைகள் மற்றும் கிடங்குகளுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயில்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், அவற்றை அகற்றும் நடவடிக்கையாக 717 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு முதலமைச்சர் விஜய் முன்பே உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல கடைகள் செயல்பாடுகளை நிறுத்தின.
இதனால், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பணிநிலையைப் பற்றிய குழப்பத்தில் இருந்தனர். இந்த சூழலில், அவர்களின் பணித் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மாற்றுப்பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய உத்தரவின்படி, மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களின் சேவை காலம் மற்றும் பணி மூப்பு கணக்கில் கொண்டு, காலிப்பணியிடங்கள் உள்ள பிற சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகளுக்கு அவர்கள் மாற்றப்பட உள்ளனர். மாவட்ட வாரியாக பணியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை மூலம் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படுவதுடன், நிர்வாக சுமையையும் சமநிலைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
மேலும், மாற்றுப்பணி தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் மூலம் ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P