Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச)
சென்னை எழும்பூரில் நடைபெற்ற சி.பா. ஆதித்தனார் அவர்களின் 45வது நினைவு நாள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பத்திரிக்கை உலகின் பிதாமகனாக திகழ்ந்த ஆதித்தனார், தினத்தந்தி மூலம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர். சாதாரண கிராம மக்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டவர். சிறந்த சபாநாயகர், அமைச்சர் மற்றும் பத்திரிக்கை நிறுவனராக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் திமுக தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் கூட்டணியாக செயல்பட்டுள்ளன. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என பல்வேறு தளங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம் என்றார்.
மேலும், இன்று அரசியல் ரீதியாக வேறு வேறு கூட்டணிகளில் இருந்தாலும், கடந்த கால உறவை நினைத்து திமுக இதுபோன்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டணி அமைப்பதும், பிரிவதும் தமிழ்நாட்டு அரசியலில் புதிதல்ல என்று கூறினார்.
திமுக அவர்கள் வேலையை பார்க்கட்டும், காங்கிரஸ் அவர்கள் வேலையை பார்க்கட்டும். தமிழ்நாடு மக்களுக்காக தங்களால் முடிந்த பணிகளை செய்வதே முக்கியம். ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சனம் செய்வது நாகரீகமான அரசியல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா முழுவதும் பாஜக வெற்றி பெற்றதால்தான் அவர்கள் ஆட்சியில் உள்ளனர்; காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. வருங்காலங்களில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ