Enter your Email Address to subscribe to our newsletters

உத்தர்காசி, 24 மே (ஹி.ச.)
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை யமுனோத்ரி தாமத்தின் அருகிலுள்ள கர்சாலி ஹெலிபேடில் வந்திறங்கினார்.
இங்கிருந்து அவர் யமுனோத்ரி கோயிலுக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
கர்சாலி ஹெலிபேடில் தேர்தல் ஆணையரை உத்தரகாண்ட் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.வி.ஆர்.சி. புருஷோத்தம், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் குமார் ஜோக்தாண்டே, உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் உபாத்யாய் ஆகியோர் வரவேற்றனர்.
ஞானேஷ் குமார் நேற்று இந்திய-சீன எல்லையையொட்டிய உத்தர்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். வரவிருக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (Special Intensive Revision - SIR) முன்னேற்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
ஹர்சில் மற்றும் கங்கோத்ரி சட்டமன்றத் தொகுதிப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற அவர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs), வாக்காளர்கள், துறவிகள் மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்து வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கலந்துரையாடினார்.
தொலைதூர, எல்லைப் பகுதிகளில் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக தேர்தல் ஆணையத்தின் இந்த பயணம் பார்க்கப்படுகிறது.
நேற்று பயணத்தின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் தனது மனைவியுடன் உலகப் புகழ்பெற்ற கங்கோத்ரி தாமத்திற்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அங்கு யாத்திரை ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் தயார்நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
கர்சாலியிலிருந்து யமுனோத்ரி கோயில் சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பக்தர்கள் இங்கிருந்து நடைப்பயணம், குதிரை அல்லது பல்லக்கு மூலம் கோயிலை அடையலாம். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஹெலிகாப்டர் சேவை பெரும் வசதியாக உள்ளது.
யமுனோத்ரி கோயிலுக்கான ஹெலிகாப்டர் சேவை டேராடூனில் இருந்து கர்சாலி வரை இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹெலிபேடு, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சில காலம் செயல்படாமல் இருந்தது. தற்போது மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அறிக்கை கோரியுள்ள நிலையில், சேவையை மீண்டும் தொடங்க கோயில் குழு வலியுறுத்தி வருகிறது.
சார் தாம் யாத்திரை காலமான மே-ஜூன் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் யமுனோத்ரி ஹெலிகாப்டர் சேவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வானிலை சீராக இருந்தால் ஒரே நாளில் தரிசனம் முடித்து திரும்பும் வசதியும் உள்ளது.
Hindusthan Samachar / vidya.b