Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 24 மே (ஹி.ச.)
கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கொளந்தாகவுண்டனூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடை எண் 4927-ஐ இடமாற்றம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதிக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாக கூறி, அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் ஜோசப் விஜய், மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோருக்கு ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 7 நாட்களுக்குள் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் பொதுமக்கள் கடை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam