Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம், 1997-ன் கீழ் ஆன்லைன் இணையதள வாயிலாக பதிவு பெற 2019 முதல் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள 8,000 விண்ணப்பங்கள் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 21.05.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பங்கேற்று, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் (CEA) தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 2019 முதல் ஆன்லைன் தளத்தில் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மனுக்களை வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு, தகுதி வாய்ந்த க்ளினிக் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டும் தற்காலிகச் சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சில ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களைப் போல புதிதாக 8,000 க்ளினிக் அல்லது மருத்துவமனைகள் துவங்குவதற்கான எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P