Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி அமைச்சரவை புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற அரசியல் நிலைப்பாட்டை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்த கட்சியாகும். அதிகாரம் ஒரே கட்சியில் மட்டுமே குவியாமல், பல்வேறு அரசியல் சிந்தனைகளுக்கும் சமூகப் பிரதிநிதித்துவத்திற்கும் இடமளிக்கும் ஆட்சி முறைதான் ஜனநாயகத்தின் உண்மையான வடிவம் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இந்த கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய பங்கு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அரசியல் முன்னேற்றமாகும்.
இது தமிழக அரசியலில் புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் மதித்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி என்பது ஒரே கட்சியின் விருப்பப்படி நடைபெறுவது அல்ல; கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் அனுபவமும், கருத்தும், மக்கள் நலப் பார்வையும் இணைந்தால் மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ள அவர், கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பு அமைச்சரவைப் பதவிகளில் மட்டும் முடங்கிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் கொள்கைகள் வகுப்பதிலும், மக்கள் நலத் திட்டங்களை திட்டமிடுவதிலும், நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதிலும், மாற்று ஆலோசனைகளை வழங்குவதிலும் கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணி ஆட்சி என்பது அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல; அது பொறுப்புப் பகிர்வும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், சமூக நீதி, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் மக்கள் நல முன்னேற்றங்களை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, தமிழகத்தின் தற்போதைய கூட்டணி அமைச்சரவை ஜனநாயகத்திற்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
கூட்டணி அரசின் இந்த தொடக்கம் மக்கள் நலனுக்கான சிறந்த ஆட்சியாக மலர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ