கரப்பான்பூச்சி இயக்கத்திற்கு ஆதரவாக கோவையில் DYFI அமைப்பினர் பேரணி
கோவை , 24 மே (ஹி.ச.) கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்டு பேசியது பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந
T


கோவை , 24 மே (ஹி.ச.)

கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்டு பேசியது பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கு உள்ளானது.

அதனைத் தொடர்ந்து இணைய வழியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற ஒரு இணைய வழி இயக்கம் துவங்கப்பட்டு பல கோடி பேர் அதனை ஃபாலோ செய்ய துவங்கி உள்ளனர்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய மத்திய அரசு தற்போது வரை வேலை வாய்ப்பு வழங்கவில்லை தரமான கல்வியை வழங்கவில்லை ஊழல் நடைபெறுகிறது என்பதையெல்லாம் குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர் அதனை மத்திய அரசு முடக்கிய நிலையிலும் வேறு பெயரில் மீண்டும் துவங்கப்பட்டது.

அதில் பல்வேறு படித்த இளைஞர்களும் அவர்களது கருத்துக்களை மத்திய அரசுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்த இணையவழி அமைப்பிற்கு ஆதரவாக DYFI அமைப்பு சார்பில் இன்று பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி காந்திபுரம் பகுதி வரை நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கரப்பான் பூச்சி போன்று முகமூடி அணிந்தும் கழுத்தில் அட்டை அணிந்தும் மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தரமான கல்வியை வழங்க வேண்டுமென இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் விஜய் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்ததை சுட்டிக்காட்டியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து பேட்டி அளித்த DYFI மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா,

தலைமை நீதிபதி பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்று தெரிவித்த அவர் தாங்கள் செய்தால் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று மத்திய அரசு கூறியது ஆனால் மத்திய அரசு தற்போது வரை படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார்.

இப்படி இருக்கும் பொழுது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காத மத்திய அரசை கண்டிக்காமல் இளைஞர்களை பற்றி நீதிபதி பேசியது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் கரப்பான் பூச்சி என்ற பேஜ் யை முடக்குவது கருத்துரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர் அதில் இந்தியாவில் நடைபெறும் ஊழல் வேலை இன்மை ஆகிய மக்கள் படும் கஷ்டங்களை தான் பதிவிட்டு வருவதாக தெரிவித்தார்.

எனவே ஒன்றிய அரசு உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தாங்கள் கரப்பான் பூச்சி கட்சியை நாங்கள் ஆரம்பிக்கவில்லை என்றும் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA