Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 மே (ஹி.ச.)
மதுரையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக ரேசன் கடை விற்பனையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவரை கைது செய்து 450 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் அன்புதாசன் தலைமையிலான அதிகாரிகள் செல்லூர் மேலதோப்பு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, 10 மூட்டைகளில் சுமார் 450 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இந்த அரிசிகளை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (28), அருண்பாண்டி, அருண்ராஜ் மற்றும் ரேசன் கடை விற்பனையாளர் கோவிந்தராஜ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அரிசி மூட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக மற்ற குற்றவாளிகளை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN