Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 மே (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது;
நேற்று நள்ளிரவு வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா? தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் நிர்வாகத்தின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்?
தேர்தலின் போது திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த சட்டம் ஒழுங்கைப் பற்றி கடுமையாக விமர்சித்த திரு. ஜோசப் விஜய் அவர்கள், தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் அதைத் தானே சரி செய்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam