Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 மே (ஹி.ச.)
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட ஆய்வில், உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரின் தரத்தில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
ஆய்வின்போது, கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் உறைகளில் பார் கோடு ஸ்டிக்கர் , தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட கட்டாய விவரங்கள் குறிப்பிடப்படாதது தெரியவந்தது. மேலும், சில பொருட்களில் தயாரிப்பு தேதி கையால் எழுதப்பட்டிருந்ததும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட RO குடிநீர் வசதியின் தரத்தை ஆய்வு செய்தபோது, TDS அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பில் பராமரிக்கப்படாதது கண்டறியப்பட்டதால், உடனடி சீரமைப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
கழிப்பறைகள் தினமும் 3 முதல் 5 முறை வரை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க தினமும் சுத்தமாகவும் கட்டாயமாக பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
திருக்கோயில்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் குறைபாடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பக்தர்களுக்கு தரமான வசதிகளை வழங்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ