ப்ரொஃபசர் நாகேஸ்வர் மீது வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் – ஹரீஷ் ராவ் கோரிக்கை
ஹைதராபாத் , 25 மே (ஹி.ச.) ஜனசேனா தலைவர் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ப்ரொஃபசர் நாகேஸ்வர் தெரிவித்த கருத்துகள் இரண்டு தெலுங்க
T


ஹைதராபாத் , 25 மே (ஹி.ச.)

ஜனசேனா தலைவர் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ப்ரொஃபசர் நாகேஸ்வர் தெரிவித்த கருத்துகள் இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தின.

ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும் என்று பவன் கல்யாண், அமித் ஷாவிடம் கோரியதாகவும், ஆனால் ஜெகன் தங்களது நீண்டகால நண்பர் என்பதால் அவருடன் நல்லுறவில் இருக்க வேண்டும் என்று அமித்ஷா, பவன் கல்யாணுக்கு அறிவுறுத்தியதாகவும் நாகேஸ்வர் கூறியதாக தகவல்கள் வெளியானது.

இதனை ஜனசேனா கட்சி கடுமையாக எதிர்த்தது.

நாகேஸ்வர், வைஎஸ்ஆர்சிபிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி, ஜனசேனா ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ததுடன், ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தனர்.

இதனால் அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த சர்ச்சையை தொடர்ந்து, ப்ரொஃபசர் நாகேஸ்வர் தாம் கூறிய கருத்துகளை எந்த நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற்றதாக அறிவித்தார்.

இருப்பினும், அவர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடரப்படுவது குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், ஹரீஷ் ராவ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பதிவில்,

நாகேஸ்வர் ஏற்கனவே தனது கருத்துகளை வாபஸ் பெற்றுள்ளார்.

அதற்குப் பிறகும் பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் பதிவு செய்து தொந்தரவு செய்வது சரியல்ல.

மேலும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்றும், நாகேஸ்வர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் ஜனசேனா தரப்புகள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA