Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 25 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதையொட்டி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சுப்புராஜ் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். நீதிமன்ற வளாகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியதால், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியில் கடந்த மாதம் 10-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் சென்ற 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பாக போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடத்திய விசாரணைக்கு பிறகு, தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை போலீசார் கடந்த மார்ச் 19-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN