சிலியின் சுரங்க மையமான அன்டோஃபகாஸ்டாவை உலுக்கிய 6.9 ரிக்டர் நிலநடுக்கம்
ஹி.ச, 26 மே (சிலி.) சிலி நாட்டின் முக்கிய சுரங்கப் பகுதியான அன்டோஃபகாஸ்டா பிராந்தியத்தை நேற்று 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. உலகின் முன்னணி தாமிர உற்பத்தி மையங்களில் ஒன்றான இப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ச
சிலியின் சுரங்க மையமான அன்டோஃபகாஸ்டாவை உலுக்கிய 6.9 ரிக்டர் நிலநடுக்கம்


ஹி.ச, 26 மே (சிலி.)

சிலி நாட்டின் முக்கிய சுரங்கப் பகுதியான அன்டோஃபகாஸ்டா பிராந்தியத்தை நேற்று 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

உலகின் முன்னணி தாமிர உற்பத்தி மையங்களில் ஒன்றான இப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சில சுரங்க நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எனினும், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் உயிர்ச்சேதங்கள் பெரிய அளவில் தவிர்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) பதிவுகளின்படி, நிலநடுக்கம் 109 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

உலகின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி நாடான சிலியின் இதயப்பகுதியில் இந்த அதிர்வு உணரப்பட்டாலும், முன்னணி சுரங்க நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளன.

சிலி அரசுக்கு சொந்தமான கோடெல்கோ (Codelco) நிறுவனம், சில பகுதிகளில் பார்வைத்திறன் குறைந்ததாலும் மின்சாரத் தடை ஏற்பட்டதாலும் பல்வேறு செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு, நிலைமை சீரான பின்னர் படிப்படியாக பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

இதற்கிடையில், உலகளாவிய சுரங்க நிறுவனங்களான பி.ஹெச்.பி (BHP) மற்றும் அன்டோஃபகாஸ்டா பிஎல்சி ஆகியவை தங்களின் சுரங்க நடவடிக்கைகள் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்வதாக உறுதி செய்துள்ளன.

தாமிர விலை மற்றும் உலகளாவிய சப்ளை செயின் மீது உடனடி தாக்கம் எதுவும் இல்லை என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுரங்க நகரமான கலாமா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சில குடியிருப்பாளர்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் தற்காலிக தடங்கல்களை எதிர்கொண்டனர்.

இருப்பினும், மருத்துவமனைகள், அவசர சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் எந்தவித இடையூறும் இன்றி செயல்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள சிலி, உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும். கடுமையான கட்டுமான விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகள் காரணமாக, பெரிய நிலநடுக்கங்களின் போதும் உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் பெருமளவு குறைக்கப்படுகின்றன. 2010-ல் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தை எதிர்கொண்ட அனுபவம், நாட்டின் பேரிடர் மேலாண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் சிலி அரசின் பேரிடர் மேலாண்மை அலுவலகம் (SENAPRED) அறிவித்துள்ளது.

சேத மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b