Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
சென்னை கே.கே. நகர் பகுதியில் மாற்றுத்திறன் கொண்ட இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உடன் வேலை பார்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி படிப்பை முடித்து அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், கடந்த 2024 செப்டம்பர் மாதம் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மீண்டும் வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில நாட்களாக உடல்நலக்குறைவால் கே.கே. நகர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது மேற்கொண்ட பரிசோதனையில், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் கருக்கலைப்பு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் வழக்கு கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், உடன் வேலை பார்த்த அண்ணாதுரை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த மே 23ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த அண்ணாதுரையை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் தேடி வந்தனர்.
அமைந்தகரை பகுதியில் பதுங்கியிருந்த அண்ணாதுரையை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாற்றுத்திறன் கொண்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ