பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் ஏமாற்றம் - ஜூன் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு, 26 மே (ஹி.ச.) கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், ர
விவசாய


தமிழ்நாடு, 26 மே (ஹி.ச.)

கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 14.22 லட்சம் முதல் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக அரசு ரூ.2,044 கோடிக்கும் அதிகமான நிதிச்சுமையை ஏற்கிறது.

ஆனால், இந்த அறிவிப்புக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அரசின் அறிவிப்பை “மிகப்பெரிய ஏமாற்றம்” என்று விமர்சித்துள்ளது. தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை என்றும், அறிவிக்கப்பட்ட திட்டம் பலருக்கும் நடைமுறை பயன் அளிக்காது என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கருத்துப்படி,

தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்ட விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு பகுதி தள்ளுபடி வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய அறிவிப்பில் கடன் தொகை அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருப்பதால், பல சிறு மற்றும் குறு விவசாயிகள் முழு நிவாரணத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, “விவசாயிகளுக்கு பயனளிக்காத இந்தத் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். வாக்குறுதியின்படி சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அமல்படுத்தப்பட வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூன் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P