Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
நடப்பு மே மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாமன்றக் கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னதாக மண்டலக் குழுக் கூட்டங்கள் மற்றும் நிலைக் குழுக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
அக்குழுக்களில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களே மாமன்றத்தின் இறுதி ஒப்புதலுக்காக வைக்கப்படும்.
ஆனால், இம்மாதம் மண்டலக் குழுக் கூட்டங்களோ அல்லது நிலைக் குழுக் கூட்டங்களோ கூட்டப்படவில்லை என்பதால், விவாதிப்பதற்கான முக்கிய பொருள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே மே மாதத்திற்கான மாமன்றக் கூட்டத்தை ரத்து செய்வதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் மாமன்றக் கூட்டம் கூட்டப்பட்டு, நகரின் வளர்ச்சித் திட்டங்கள், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்த மாதம் கூட்டம் இல்லாததால், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்த முடிவுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b