Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் மவுனம் காப்பதாக காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
நீட் தேர்வு தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளும் எதிர்காலமும் சிதைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், தொடர்ந்து நான்காவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருவதால், சாமானிய மக்கள் தினமும் கூடுதல் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய முக்கியமான மக்கள் பிரச்சினைகள் குறித்து வழக்கமாக கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் தற்போது மவுனம் காப்பதாக அவர் சாடியுள்ளார்.
குறிப்பாக, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரை குறிப்பிட்டு, “ஒருவராவது இதுகுறித்து ஒரு வார்த்தை பேசினார்களா?” என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பிரச்சினை வந்தால் அமைதி, அரசியல் விவகாரம் வந்தால் மைக்கை பிடிக்க போட்டி” என்று விமர்சித்துள்ள அவர், இந்த அமைதிக்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “மேலிடத்திலிருந்து பேசக்கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதா?” என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P