Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 26 மே (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு இன்று ஆன்மீகப் பயணமாகப் நடிகர் ரவி மோகன் வருகை தந்தார்.
அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் சென்ற நடிகர் ரவிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து, இன்று மதியம் மலைக்கோயிலில் நடைபெற்ற முக்கிய வழிபாடான உச்சிக்கால பூஜையில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது முருகப்பெருமான் 'பாலசுப்பிரமணியர்' அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ராஜ அலங்காரப் பொலிவோடு காட்சியளித்த முருகப்பெருமானை நடிகர் ரவி மோகன் கைகூப்பி மனமுருகி தரிசனம் செய்தார்.
ஆனந்த தரிசனத்திற்குப் பின்பு, மலைக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற போகர் சித்தரின் சன்னதிக்குச் சென்ற அவர், அங்கேயும் அமர்ந்து பக்திப் பரவசத்துடன் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.
திரைப்பட நடிகர் ரவி மோகன் பழனி கோயிலுக்கு வந்திருக்கும் விபரமறிந்து, மலைக்கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். ரசிகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, புன்னகையுடன் அவர்களுடன் கைகுலுக்கிய நடிகர் ரவி மோகன், ரசிகர்கள் பலருடனும் உற்சாகமாகச் செல்பிக்கள் எடுத்துக்கொண்டார்.
மலைக்கோயில் தரிசனங்கள் அனைத்தையும் நிறைவு செய்த பின்னர், அவர் ரோப் கார் (Rope Car) மூலமாகப் பாதுகாப்பாக மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கிச் சென்றார்.
Hindusthan Samachar / ANANDHAN