Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்கால், 27 மே (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீசெண்பக தியாகராஜர் நேற்று நள்ளிரவு யதாஸ்தானத்திலிருந்து உன்மத்த நடனமாடி ஆலய பிரகாரங்களை வலம் வந்து நள்ளிரவு திருத்தேருக்கு எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ நீலோத்பலாம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீ செண்பக தியாகராஜர் மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு கேரள பாரம்பரிய செண்டை மேளம் மற்றும் தமிழர் பாரம்பரிய வாத்தியங்களான தாரை தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கவும் சிறப்பாக நடைபெற்றது.
நள்ளாறா தியாகேசா என கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து அம்பாள் தேரையும் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்ட விழாவில் நாகை, காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.
விழாவில் தருமபுர ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் , சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன், ஆலய நிர்வாக அதிகாரி சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருதேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் பக்தர்கள் நள்ளாறா தியாகசா என்று முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் 28ம் தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவும் 29ம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b