Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 27 மே (ஹி.ச.)
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகுடஞ்சாவடி பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மின் வாரிய ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அருகே கோணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (51). இவர் மின் வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள மின் கம்பத்தை பார்வையிட்டு விட்டு, அங்கு வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் தண்ணீர் கேட்டுள்ளார். சிறுமியும் வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து வீட்டின் வெளியே நின்றிருந்த சீரங்கனிடம் கொடுத்துள்ளார்.
தண்ணீர் குடித்துவிட்டு சொம்பை திருப்பிக் கொடுத்த பின்னர், சிறுமி வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, பின்னால் நின்றிருந்த சீரங்கன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, “என் பெரியப்பாவிடம் சொல்கிறேன்” என கூறியுள்ளார். அதற்கு சீரங்கன், “யாரிடமும் சொல்லு, நான் பார்த்துக் கொள்கிறேன்” என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
உடனே அழுதபடியே நடந்த சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய், சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சீரங்கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் சீரங்கனை சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam