Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 மே (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத கனிம வெட்டலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த மொத்தம் 76 கல்குவாரிகள் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் அளவீடு செய்யப்பட்டு ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
இந்த ஆய்வில், சில குவாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குத்தகைப் பரப்பை மீறி கல் வெட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுடன் அவசர கலந்தாய்வு நடத்தினார்.
இந்த கலந்தாய்வில் ட்ரோன் மூலம் பெறப்பட்ட அளவீட்டு அறிக்கைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, குத்தகை வரம்பை மீறி குவாரிப் பணிகளை மேற்கொண்டதாக கண்டறியப்பட்ட 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆளில்லா விமானம் மூலம் பெறப்பட்ட முழுமையான அளவீட்டு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது சட்டப்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கனிம வெட்டலை தடுக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தமிழக அரசு கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ