நாகர்கோயிலில் திமுக அலுவலகத்தில் புகுந்து தவெகவினர் மோதல் - போலீசார் விசாரணை
கன்னியாகுமரி, 28 மே (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள திமுக கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் புகுந்து மர்ம கும்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, த.வெ.க. கொடிகளுடன் லோடு ஆட்டோவில்
தாக்குதல்


கன்னியாகுமரி, 28 மே (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள திமுக கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் புகுந்து மர்ம கும்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, த.வெ.க. கொடிகளுடன் லோடு ஆட்டோவில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல், அலுவலகம் முன்புற சாலையோரத்தில் கொடி நட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு திடீரென மோதலாக மாறியுள்ளது.

இதன் உச்சத்தில், அந்த கும்பல் திமுக அலுவலகத்தின் கேட்டை உடைத்து வளாகத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் அலுவலக கேட் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள் அலுவலகத்துக்கு விரைந்து சென்றபோது, சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திமுகவினர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோதலில் ஈடுபட்டவர்கள் உண்மையில் த.வெ.க. கட்சியினரா அல்லது கொடி நட வந்த தொழிலாளர்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக அலுவலக வளாகத்திற்குள் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam