வைகாசி விசாகத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை, 28 மே (ஹி.ச.) வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் கூடுதல் பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய முருகன் தலங
ரயில்


சென்னை, 28 மே (ஹி.ச.)

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் கூடுதல் பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய முருகன் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இதனால் ரயில் மற்றும் பேருந்து சேவைகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இருவழி சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாளை மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06155), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

அதேபோல், திருச்செந்தூரில் இருந்து வருகிற 30-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06156), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம், வைகாசி விசாக விழாவிற்காக திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுப் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்படுவதாகவும், பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P