Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 29 மே (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவில் உருவாகியுள்ள உள்கட்சி பூசலுக்கு மத்தியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவதா, மாற்று அரசியல் பாதையை தேர்வு செய்வதா என்பது தொடர்பான தனது முடிவை அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரில் உள்ள தனது இல்லத்தில், ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் சி.விஜயபாஸ்கர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் கட்சியின் தற்போதைய நிலைமை, எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் பல்வேறு விருப்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், அதிமுகவில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளை சரிசெய்யும் முயற்சியாக சில முக்கிய தலைவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சில முன்னணி நிர்வாகிகள் இன்னும் முழுமையாக சமரச மனப்பான்மைக்கு வரவில்லை என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது, அதிமுகவிலேயே தொடர்வது அல்லது தனித்த அரசியல் அணுகுமுறையை கடைப்பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலுப்பையூரில் அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூடிவரும் நிலையில், சி.விஜயபாஸ்கரின் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P