அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்கள் - நடவடிக்கை எடுக்கும் இந்து சமய அறநிலையத் துறை
தூத்துக்குடி, 29 மே (ஹி.ச.) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, அவர் அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர்கள் ரூ. 4,000 லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்
Minister Ramesh


தூத்துக்குடி, 29 மே (ஹி.ச.)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, அவர் அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர்கள் ரூ. 4,000 லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருகோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில், இங்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பது தொடர்பாக வந்த புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். அப்போது அவர் தனது காரை கோயிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, முகக்கவசம் மற்றும் டி சர்ட் அணிந்து சாதாரண பக்தர் போல் கோயிலுக்குள் சென்றார்.

திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், பக்தர்கள் அனைவரும் சமமாக தரிசனம் செய்வதற்காக அனைத்து விதமான கட்டண தரிசன முறைகளையும் கோயில் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

கோயிலுக்குள் அமைச்சர் ரமேஷ் வந்த நிலையில் உடன் வந்திருந்த அவரது உதவியாளர்களில் ஒருவர், விரைவாக சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும்? என்று அங்கிருந்த அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளார். வந்திருப்பவர் அமைச்சர் என்று தெரியாத அர்ச்சகர்கள், தலைக்கு ரூ. 1,000 வீதம் மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர்.

அப்போது கையில் ரொக்கமாக பணம் இல்லை என்று கூறிய அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களில் ஒருவரின் ஜிபே கணக்கிற்கு ரூ.4,000 அனுப்பி வைத்துள்ளார். பின்னர், டிஜிட்டல் ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களை அமைச்சர் ரமேஷ் கையும் களவுமாகப் பிடித்தார். இதனால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அமைச்சர் ரமேஷ் முறைகேட்டில் சிக்கிய அர்ச்சகர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அறநிலையத் துறை ஊழியர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை கடுமையாக எச்சரித்தார். பின்னர் அவர்களிடம் விளக்கக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்,

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைவில் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.

முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN