Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச.)
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் வந்தடைந்துள்ளது.
தமிழகம்–ஆந்திரம் இடையிலான ஒப்பந்தத்தின் படி, ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி மற்றும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த பருவத்திற்கான நீரை திறந்து விட தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஆந்திர பொதுப்பணித்துறை கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தது.
அணையில் இருந்து சுமார் 152 கிலோமீட்டர் பயணித்த கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை கடந்த பின்னர் கண்டலேறு–பூண்டி கால்வாய் வழியாக பூண்டி ஏரியை வந்தடைந்தது.
தற்போது பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 30 கனஅடி அளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 1250 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam