Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருவதாக அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில்,
கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Hindusthan Samachar / ANANDHAN