Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 03 மே (ஹி.ச.)
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு இன்று மதியம் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 3000 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் கடந்த 6 ஆண்டுகளில் 29 மாணவிகள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5% உள்இட ஒதுக்கீட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடக்கும் நீட் தேர்விற்கு கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புதிய மாணவிகள் 70 பேரும், பழைய மாணவிகள் 25க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 95 மாணவிகள் தேர்வு எழுதச் சென்றனர்.
முன்னதாக மாணவிகளுக்கு பதற்றத்தை குறைக்க அறிவுரைகள் கூறி தலைமை ஆசிரியை வள்ளிநாயகி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகள் கூறினர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,
எங்கள் பள்ளியில் நீட் வருவதற்கு முன்பே பல மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவராகி உள்ளனர். அதன் பிறகு நீட் தேர்வு வந்த பிறகு கடந்த 6 ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எங்கள் பள்ளி மாணவிகள் 29 பேர் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கின்றனர்.
7..5% உள் இடஒதுக்கீட்டில் அதிகமான மருத்துவ மாணவிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி என்ற பெருமை எங்கள் பள்ளிக்கு உள்ளது. இந்த வருடம் புதிய மாணவிகள் 70 பேரும், பழைய மாணவிகள் 25 பேருக்கு மேல் என 95 மாணவிகள் நீட் தேர்வு எழுதச் செல்கிறார்கள்.
அவர்களை வழக்கம் போலவே பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் மூலம் வாகன ஏற்பாடு செய்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் உடன் அனுப்பி இருக்கிறோம்.
அதனால் இந்த வருடமும் எங்கள் பள்ளி மாணவிகள் அதிகமானோர் மருத்துவம் படிக்க செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b