Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மே (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்டம்-ஒழுங்கையும் உறுதி செய்யும் வகையில், சென்னை நகர போலீசாரும் துணை ராணுவப் படையினரும் இணைந்து இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் மற்றும் எண்ணூர் விரைவுச் சாலை ஆகிய இரு இடங்களில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர், சென்னை மாநகர காவல்துறையினர் மற்றும் விரைவு நடவடிக்கைப் படையினர் பங்கேற்றனர்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களிடம் பாதுகாப்பு நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவையான இடங்களில் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நாள் முழுவதும் அமைதியான சூழலை உறுதி செய்வதற்காக காவல்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அமைதியை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P