Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 03 மே (ஹி.ச.)
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் 9, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நாளை (04-05-26) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டசபை தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சரிபார்ப்பு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவ வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மட்டும், மொபைல் போன்கள் இல்லாமல், சி.சி.டி.வி., கண்காணிப்பு அறை மூலம் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நாளை ஓட்டு எண்ணிக்கை நாள் என்பதால், ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்து வரும் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது, ஓட்டு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் அமர இருக்கை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், ஓட்டு எண்ணிக்கையின்போது அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். ஓட்டு எண்ணிக்கை அமைதியாக, அசம்பாவிதம் ஏதுமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விருத்தாசலம் விஷ்ணுபிரியா, திட்டக்குடி தமிழ்கனி, நகராட்சி ஆணையர் நாகராஜ், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், தாசில்தார் பிரகாஷ், பி.டி.ஓ., லட்சுமி உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b