Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 03 மே (ஹி.ச.)
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் தற்போது விசைப்படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மட்டுமே மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் நேற்று சனிக்கிழமை கரை திரும்பியபோது மீன்களின் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது.
இருப்பினும் பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் இன்று அலைமோதியது.
குறைவான வரத்தும் அதிக தேவையும் இருந்ததால் விலை பன்மடங்கு உயர்ந்தது. சீலா மீன் கிலோ ரூ. 1,300 - ரூ.1,500, விளை மீன் ரூ. 700 வரை, பாறை ரூ. 500 வரை, கேரை-சூரை ரக மீன்கள் ரூ. 250 - ரூ. 270, ஐலேஷ் ரூ. 250 வரை, நண்டு ரூ. 700 - ரூ. 800, ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி, களவா ஆகியவை ரூ. 400 - ரூ. 500, குருவலை ரூ. 1,000 வரை என விற்பனையாகின.
வரத்து குறைவாக இருந்தாலும், மீன்களுக்குக் கூடுதல் விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b