Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 30 மே (ஹி.ச.)
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, கோடை விடுமுறை மற்றும் சனிக்கிழமை வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இன்று சனிக்கிழமை வார இறுதி விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நிறைவடையும் தருவாய் என்பதால், பழனி மலைக்கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர்.
அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக இயக்கப்படும் வின்ச் ரயில் நிலையங்கள் மற்றும் ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருக்கின்றனர்.
அதேபோல், மலைக்கோயிலில் உள்ள பொது தரிசன வழிகள் மற்றும் கட்டண தரிசன வழிகள் என அனைத்துப் பாதைகளிலும் பக்தர்களின் கூட்டம் இருக்கிறது.
பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்திப் பரவசத்துடன் மூலவர் தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று மாலை 4 மணிக்கு வைகாசி விசாகத் திருவிழாவின் சிகர நிகழ்வான மகா திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
காவல்துறை சார்பில் பழனி நகர் மற்றும் மலைக்கோயில் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன
Hindusthan Samachar / ANANDHAN