Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 மே (ஹி.ச.)
தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பல்வேறு அரசு பணிகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, கோவை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வந்த கபடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
விளையாட்டு வீரர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அவர்களது கருத்துகளை கவனமாக பதிவு செய்தார்.
இதன் போது, பயிற்சிக்குத் தேவையான டி-ஷர்ட்கள், விளையாட்டு காலணிகள் உள்ளிட்ட அடிப்படை உபகரணங்களை அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, விளையாட்டு துறையின் வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்கிறார்.
இதில் விளையாட்டு மேம்பாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், வீரர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் விரிவாக்கப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் முக்கிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.
இதையடுத்து, மாலை நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P