Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், நான்கு சிறார்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து,போலீசார் கூறுகையில்,
திருமங்கலம் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு, அந்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் சிறுமியை சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பொருட்காட்சியை சுற்றிப் பார்த்த பின்னர், அதன் பின்புறத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் 16 வயதுடைய மூன்று சிறார்கள் மற்றும் 13 வயது சிறுவன் உட்பட நான்கு பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே பாலியல் துன்புறுத்தல் மட்டுமா அல்லது பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என்பது உறுதியாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam