Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
இதில் இடதுசாரி கட்சிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து பங்கேற்கின்றன.
மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புக்கு முரணாக கர்நாடக அரசு செயல்படுவதாகவும், இது தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் மதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b