Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 மே (ஹி.ச.)
திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிவிக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில், பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
காவி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளம் மட்டுமல்ல; பொதுவாக துறவறத்தையும் தியாகத்தையும் குறிக்கும் நிறம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமண மற்றும் பௌத்த மரபுகளிலும் காவி நிற ஆடை பயன்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், சிலப்பதிகாரத்தில் மாதவி மற்றும் கவுந்தி அடிகள் காவி அணிந்ததாக குறிப்பிடப்படுவதை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்.
மேலும், திருக்குறளில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு, ஊழ்வினை, துறவறம் உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றிருப்பதையும் குறிப்பிட்டு, திருவள்ளுவரை குறிப்பிட்ட சிந்தனைக்குள் மட்டுமே அடைக்க முயல்வது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.
உலகமே ஒரு குடும்பம் என்ற சனாதனக் கொள்கையை மேற்கோள் காட்டியுள்ள கஸ்தூரி, திருவள்ளுவர் அனைவருக்குமான பொதுமறையை வழங்கியவர் என்றும், அவரை குறுகிய அரசியல் அல்லது சித்தாந்த அடையாளங்களுக்குள் அடைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளுவருக்கு எந்த வகையான அலங்காரம் செய்யலாம் என்பதை யார் தீர்மானிப்பது என்ற கேள்வியையும் அவர் தனது பதிவில் எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ