Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச.)
தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது.
இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது.
அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன.
சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன், அதில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் தனித்துவமான தோற்றம் மற்றும் மனநிலையை வெளிப்படுத்தும் விதம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்க, இவர்களுடன், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார்.
மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி, அனந்திகா சனில்குமார் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு தலைவன் தலைவி பட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முக்கியமான முழுநீள கதாப்பாத்திரத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார்.
மேலும்
வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மிக விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
“பரிமளா & கோ” திரைப்படம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில்,தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகியுள்ளார்.
திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / Durai.J