தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கவுள்ளார் - எஸ்.ஏ. சந்திரசேகர் மகிழ்ச்சி
சென்னை, 04 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கவுள்ளார் என தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எ
SA Chandrasekhar


சென்னை, 04 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கவுள்ளார் என தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆட்சி அமைக்க 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், தவெக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

திமுக மற்றும் அதிமுக ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இழுபறியுடன் உள்ளது.

குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது தமிழ்நாடு அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். விஜய்யின் குடும்ப உறுப்பினர்கள் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவிக்கையில், “கடந்த 30 வருடங்களாக விஜய்க்கு சமூகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. அதன்படி இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார். தமிழ் மக்கள் அவரை விரும்புகிறார்கள்.

பெண்கள் அவரை மகனாகப் பார்க்கிறார்கள். இளைஞர்கள் அண்ணன் என்று அழைக்கிறார்கள். மூத்த குடிமக்கள் அவரை பேரனாகப் பார்க்கிறார்கள். மக்களுக்கும் அவருக்கும் இடையே ஒரு உறவை விஜய் உருவாக்கிக்கொண்டார் எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இன்னும் தவெக பெரும்பான்மை பெறாத நிலையில் யாரிடம் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,

கூட்டணி குறித்து விஜயே முடிவு எடுப்பார் எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN