Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 06 மே (ஹி.ச.)
திருச்சி மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா இன்று(06-05-2026) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர், கொடிக்கு பட்டாச்சாரியார்களால் மற்றும் அர்ச்சகர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
விழாவையொட்டி, இன்று முதல் 11 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழா நிகழ்வில் தினமும் உற்சவர் நம்பெருமாள் கற்பக, யாழி, கருட வாகனம், அனுமந்த வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம், தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்கிறார்.
முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 14-ம் தேதி(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b