Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 06 மே (ஹி.ச.)
கேரளத்தில் நடைபெற்ற 140 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து கடும் போட்டி நிலவி வருகிறது.
முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
வி.டி. சதீசன்:
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இவர், இடைத்தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.
இதனால் இவருக்கு வலுவான ஆதரவு உள்ளது. ஆனால் சில சமுதாய தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் இவருக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.
ரமேஷ் சென்னிதலா:
இளமையிலேயே அரசியலில் உயர்ந்த இவர், முன்னாள் உள்துறை மந்திரியாகவும் பலமுறை எம்.பி.யாகவும் இருந்த அனுபவம் கொண்டவர்.
கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளித்தவர் என்ற பெயர் இவருக்கு உள்ளது. ஆனால் 2021 தேர்தலில் ஏற்பட்ட தோல்வி இவரின் பலவீனமாக கருதப்படுகிறது.
கே.சி. வேணுகோபால்:
தேசிய காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.
இது இவருக்கு பலமாக இருந்தாலும், தற்போது எம்.பி.யாக உள்ளவரை முதல்-மந்திரியாக தேர்வு செய்தால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், கேரளத்தின் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA