Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 06 மே (ஹி.ச.)
காவிரி டெல்டா பாசனத்தின் முதுகெலும்பாக விளங்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த 24 மணி நேரத்தில் கணிசமாக குறைந்துள்ளது.
நேற்று வினாடிக்கு 1,144 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே 06) காலை நிலவரப்படி வினாடிக்கு 797 கன அடியாக சரிந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக, மேட்டூர் அணையின் நீர்மட்டமும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று 79.98 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 79.85 அடியாக குறைந்துள்ளது.
தற்போது அணையின் மொத்த நீர் இருப்பு 41.8 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி மற்றும் 93.47 டி.எம்.சி. என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரியும் நிலை உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், நீர்வரத்து குறைந்து வருவது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டிய சூழலில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b