Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 09 மே (ஹி.ச.)
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் முயற்சியில் முனைப்புக் காட்டி வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. விசிக ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற சூழலில் தவெக உள்ளது.
இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (மே 9) தனது பேஸ்புக் தளத்தில்,
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் வந்த முடிவின்படி தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைவதற்கான சூழ்நிலைகள் இல்லை.
பல போராட்டங்கள், பேரங்களுக்கு பின் ஆட்சி அமையலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கான நலன் தரக்கூடிய ஆட்சி அமைய வாய்ப்பில்லை. எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் அமைகின்ற அரசு முன்னெடுத்து விட முடியாது.
ஒரு உதாரணத்திற்கு பரந்தூரில் அமையவிருக்கின்ற விமான நிலையத்தை தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான திறவுக்கோலாக பார்த்தோம்.
பரந்தூர் விமான நிலையம் இப்போது அமைவதற்கான சூழல் தென்படவில்லை. அதன் மூலம் நாம் எதிர்பார்த்திருந்த வளர்ச்சி நின்றுக் போகும். நிலையான ஆட்சி இல்லாத காரணத்தினால் புதிய முதலீடுகளை செய்வதற்கு பெரிய நிறுவனங்கள் முன் வராது. ஆதலால் தொழில் வளர்ச்சி குறைந்து வேலைவாய்ப்புகள் குறைந்து போகும்.
படித்து முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்படக்கூடிய சூழல் ஏற்படும்.
பல பெரிய நிறுவனங்கள் ஒருவேளை தமிழ்நாட்டிற்கு வர விரும்பினால் மற்ற மாநில அரசுகளுடைய போட்டியால் தடுக்கப்படும். சில நிறுவனம் புதிதாக வந்தால் தற்போது இருக்கின்ற மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் சலுகைகள் தர வேண்டிய தேவை இருக்கும்.
.அப்படிப்பட்ட சலுகைகளை தருவதற்கு அரசை ஆதரிக்கின்ற கட்சிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அந்த சூழலில் மற்ற போட்டி மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்களை ஈர்க்க வாய்ப்பு இருக்கும்.
எப்படி யோசித்துப் பார்த்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டு இருந்த தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகிப் போகும். தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் அமையவிருக்கின்ற புதிய அரசால் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN