தமிழக வெற்றிக் கழகம் தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு வருகிறது - நாஞ்சில் சம்பத்
சென்னை, 09 மே (ஹி.ச.) 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநில அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு பலரும் இந்தக் கட்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும்
Nanjil Sampath


சென்னை, 09 மே (ஹி.ச.)

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநில அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு பலரும் இந்தக் கட்சி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில், நேரடியாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு மக்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்ததாக திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 234 தொகுதிகள் உள்ள தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியை அமைக்க குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால் தவெகின் செயல்பாட்டு பலம் 107 ஆக குறைகிறது. இதன் காரணமாக ஆட்சியை அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இந்த நிலையில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு தவெக தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், போதுமான ஆதரவு கடிதங்கள் இல்லாததால் அந்த கோரிக்கையை ஆளுநர் மாளிகை ஏற்கவில்லை.

தற்போது தவெக 107, காங்கிரஸ் 5, சிபிஐ 2, சிபிஎம் 2 என மொத்தம் 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

பெரும்பான்மையை எட்ட இன்னும் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.

இதனால் தற்போது அனைத்து கவனமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது திரும்பியுள்ளது. விசிகவில் தவெகவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கருத்து பல நிர்வாகிகள் மத்தியில் இருப்பதாக தெரிகிறது. எனினும், கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

விசிக ஆதரவு கடிதத்தை வழங்கினால், தவெக 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டி தமிழகத்தில் புதிய அரசு அமைக்கும் சூழல் உருவாகும். இதனால் திருமாவளவன் எப்போது முடிவு அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்து, தவெக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், குதிரை பேரம் நடைபெறுகிறது என்றும் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரும் தற்போதைய அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

இந்த சூழலில் தான் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில்,

வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது, பொறாமை, அலட்சியம், அவதூறு ஆகிய படிகளைக் கடந்துதான் ஒரு கட்சி கரை சேர வேண்டும். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு வருகிறது.

நிலத்தை நிராகரித்து விட்டு நதி நடக்க முடியாது. நீல வானத்தை அலட்சியப் படுத்திவிட்டு நிலவு சிரிக்க முடியாது.

காற்றை கைது செய்துவிட்டு கால் மணி நேரம் கூட உயிர்வாழ முடியாது. தண்ணீரை மறுதலித்துவிட்டு தாகத்திற்கு விடை காண முடியாது.

மின்சாரத்தைப் புறக்கணித்து விட்டு புத்துலகு சமைக்க முடியாது.

தவெக தலைவர் விஜய்யை அலட்சியப்படுத்தி விட்டு அன்னை தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது.

நதிகள் நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது.

தேதிகள் கிழிபட உடன்படாவிட்டாலும் நாளை நடக்கும் என்று பதிவிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN