Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 01 ஜூன் (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் மே மாதத்தில் பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால், தரிசனம், உண்டியல் வருவாய் மற்றும் தலைமுடி காணிக்கை ஆகியவற்றில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை காரணமாக நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருகை தந்தனர். இதனால் மே மாதம் முழுவதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி,
கடந்த மே மாதத்தில் மொத்தம் 25 லட்சத்து 46 ஆயிரத்து 168 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான வெயில் நிலவிய போதிலும் பக்தர்களின் வருகை குறையவில்லை.
பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மூலம் உண்டியலில் ரூ.120.28 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக வருவாய் கிடைத்திருப்பது திருமலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
மேலும், 12 லட்சத்து 29 ஆயிரத்து 773 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சர்வ தரிசன வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குடிநீர், பால் மற்றும் அன்னபிரசாதம் உள்ளிட்ட வசதிகளை டிடிடி நிர்வாகம் தொடர்ந்து வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும், திருமலை ஏழுமலையான் மீதான பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதாக டிடிடி வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA