Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச)
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பிடித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 13 பேர் சிக்கியதுடன், அவர்களிடமிருந்து ரூ.81 ஆயிரம் ரொக்கம் மற்றும் 16 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தெற்கு இணை காவல் ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு, கோடம்பாக்கம் அசிஸ் நகர் முதல் தெருவில் உள்ள ஒரு இடத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பலர் ஒன்று கூடி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த இடத்தை முற்றுகையிட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
சோதனையின் போது, சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரூ.81 ஆயிரம் ரொக்கம் மற்றும் 16 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணி, அவர்கள் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் தொடர்புடையவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சட்டவிரோத சூதாட்டம் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ