Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 01 ஜூன் (ஹி.ச.)
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளன.
வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் இந்தப் பணியானது இன்று ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாட்டின் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கும், நலத்திட்டங்களை முறையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது.
இந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் வந்து தகவல்களைச் சேகரிப்பார்கள். அவர்கள் கேட்கும் 33 வகையான கேள்விகளுக்கும் பொதுமக்கள் தயக்கமின்றி, முழுமையான மற்றும் உண்மையான பதில்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்தக் கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்கள் விவரம், கல்வித் தகுதி, தொழில், வீட்டின் வசதிகள், குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.
சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், புள்ளிவிவர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
இந்தப் பணி வெற்றிகரமாக நடைபெற பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம்
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கணக்கெடுப்பு அலுவலர்கள் வரும்போது அடையாள அட்டையைச் சரிபார்த்து, அச்சமின்றி தகவல்களை வழங்குமாறு புதுச்சேரி மக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b